×

சமரச பேச்சுவார்த்தையில் தோல்வி போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

இது தொடர்பாக டிச.27ல் முதற்கட்ட சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டாததால் நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தரராஜன், ஆறுமுக நயினார், கமலகண்ணன், ஆறுமுகம், திருமலைசாமி, பாலன், கனகராஜ், தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்குமாறு ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தரப்பில், கோரிக்கைகள் தொடர்பாக பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும் அறிவுறுத்தியுள்ளது. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஓரம் கட்டி விட்டு கழகங்களின் அளவில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓய்வூதியர் பிரச்னை என்பது நீண்ட கால பிரச்னை. இதனை தீர்க்க அவகாசம் தேவைப்படுகிறது என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இப்பிரச்னையில் தெளிவாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில் வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்வதை விட வேறு வழியில்லை என தெரிவித்தனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 19ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் அறிவித்தபோதும், அதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன.

இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்னைக்காவது தீர்வு காண வேண்டும் என்றபோதும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். அதிமுகவின் தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சிஐடியு உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தத்தை நடத்த இருக்கிறோம். இப்போதும் அரசு தலையிட்டு பிரச்னைக்கான தீர்வை உண்டாக்கினால் வேலைநிறுத்தத்தை தவிர்க்கலாம். தொமுசவின் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்’’ என்றார்.

The post சமரச பேச்சுவார்த்தையில் தோல்வி போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Chennai ,State Transport Corporation ,
× RELATED சென்னையில் இருந்து திருச்சி வந்த அரசு...